Social Icons

Pages

Friday 23 August 2013

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ( Ministry of Law and Order )



மிகச்சமீபமாக இலங்கையில் “சட்டம் மற்றும் ஒழுங்கு” ற்கான அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதோடு இதன் செயலராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்த மல்லிகாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவரே விடுதலைப்புலிகளின் சர்வதேவ விவகார பொறுப்பாளரான குமரன் பத்மநாபனை மலேசியாவில் இருந்து இலங்கைக்கு கைது செய்து கொணருவதில் முக்கிய பங்காற்றினார்.

இந்த அமைச்சிற்கான தற்போதைய விளக்கம் “கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்” விதந்துரைகளை வினைத் திறனாக நடைமுறைப்படுத்துவதாகும். ஆனால் தற்போது வடக்கின் போர் அழிவுச் சின்னங்கள் அவசர அவசரமாக சுத்தமாக்கப்படுவதும், இவ்வாறான அமைச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரகாசமடைய செய்யப்படுவதும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகட்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருமையின் ஆரம்பவேற்பாடுகள் என்பதை மறக்க முடியாது. ஆயினும் இந்த அமைச்சை ஓர் அமுலாக்க பொறிமுறையாக அல்லது ஜனாதிபதியின் இனநல்லிணக்க கரிசனையின் ஓர் அங்கமாக, நவநீதம் பிள்ளையின் முன்பு அரசாங்கத்தால் சமர்ப்பிக்க முடியும் என்பதனையும் காட்ட விரும்புகின்றேன்.


தற்போது உள்ள சிவில் செயற்பாடுகளில் தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் இராணுவ தலையீடு தவிர்க்க முடியாததாகியுள்ளது. இந்த வேளையில் சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பொலிஸையும் சட்டம் மற்றும் ஒழுங்கு எனும் பெயரில் உள்வாங்கி அதன் நிர்வாக இயந்திரத்தை முன்னாள் அராணுவ அதிகாரிகளின் கைகளில் ஒப்படைப்பதானது முழு சிவில் செயற்பாட்டு கட்டமைப்பையும் இராணுவமயமாக்கல் எனும் அபாயத்தை காட்டுகின்றது. இது LLRC அறிக்கையின் மட்டுப்படுத்தப்பட்ட விதந்துரைகளுக்குள்ளும் முரணான ஓர் தடைச் செயற்பாட்டு நிலை என்பது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இந்த சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது சட்ட ஆட்சியில் (Rule of Law) இருந்து சட்டத்தின் ஆட்சிக்கு (Rule by Law) இட்டுச் சென்றுள்ள உதாரணங்கள் பல உண்டு.

இதற்கு சிறந்த உதாரணமாக மியன்மாரின் முன்னாள் இராணுவ சர்வதிகாரி ஜெனரல். நீ வின்( 1962-1988). அவர் நீதித்துறை உட்பட அனைத்து விடயங்களிலும் இராணுவ தலையீட்டை உட்புகுத்தினார். அதாவது சட்டத்தால் ஓர் விடயத்தை கூறி விட்டால் (அதாவது சட்டவாக்கத்துறை முறைப்படி அதை அங்கீகரித்து விட்டால்) அதை நிறைவேற்ற எந்த வழிமுறையையும் கையாள முடியும் என்பதாகும். சுருங்க கூறின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டல் எனும் பெயரில் அடிமைத்தனத்தை அரங்கேற்றுவது.

இலங்கை போன்ற ஒரு நாட்டின் தற்போதைய உடனடித்தேவை சட்ட ஆட்சியும் நல் அரசாட்சியும் தான். இவற்றை அடைய பின்வரும் மூன்று விடயங்கள் அவசியமானதாகும்.

01.சுயாதீனமான, அழுத்தங்களற்ற காவற்றுறை
02.சுயாதீனமான சட்டமா அதிபர் திணைக்கள நடவடிக்கைகள்
03.பக்கச்சார்பற்ற நீதித்துறை

ஆனால் துரதிஸ்ட வசமாக இதை எழுதிக்கொண்டு இருக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் இயங்கக்கூடிய நிறுவன கட்டமைப்புக்கள் இலங்கையில் இலங்கையில் இல்லை என்றே எண்ணுகின்றேன். வெலிவேரிய போன்ற சம்பவங்கள் இலங்கையின் ஜனநாயகத்தை உரசிப்பார்க்கும் வகையிலான உதாரணங்கள் ஆகும்.

மேலும் அரசின் ஓர் துறை இராணவ மயமாக்கலுக்கு உட்படுதலானது ஏனைய துறைகளும் இராணுவ பிரசன்னத்தை உள்ளீர்ப்பதை ஊக்கப்படுத்தும். உதாரணமாக இன்றும் மியன்மாரின் பிரதம நீதியரசர் ஓர் முன்னாள் இராணுவ அதிகாரியாவார் என்பது இங்கு எதிர்காலக் கண்ணோடு பார்க்கப்பட வேண்டிய விடயம்.

நவநீதம் பிள்ளையின் வருகை என்ற ஒன்றை விடுத்து வட மாகாண சபை தேர்தல் என்பதும் இச்செயற்பாட்டின் விளைவுகளை எதிர்நோக்க போகின்ற ஒன்று. அதிகாரங்கள் எவ்வெவ் வழிகளில் பகரப்படினும் இராணும் என்றும் மத்திய அரசிற்கே உரியது. எனவே இராணுவமயமாக்கல் சிவில் செயற்பாடுகளில் ஆழ வேரூன்றும் போது அது பகரப்பட்ட அதிகாரங்களை அமுல் செய்வதில் பாரிய தடைகளை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது. இவ்வாறான இயல்புகள்  அவ்வமைச்சின் எதிர்கால பலன்கள் என்பதை இலங்கையின் 60 வருட கால வரலாறு எனக்கு உதாரணமாக காட்டியுள்ளது.


( பரீட்சையை தாண்டி சட்ட மாணவர்கட்கு, விதிகள் பயன்படுவதில்லையாதலால், நேரமின்மை காரணங்களாலும் அவற்றை விலக்கியுள்ளேன்)

Thursday 1 August 2013

இலங்கையின் சட்டங்கள் ஓர் சுருக்க அறிமுகம்..


சட்டம் என்ற சொல் ஏனோ எம்மவர்கட்கு ஓர் அந்நியப் பதம் போலவும் அல்லது தண்டனையை மட்டுமே நினைவு படுத்தும் ஓர் குறிகாட்டி போலவும் மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் சட்டம் சமூகத்தை வழிநடாத்தவும் வழிதவறியோரை நெறிப்படுத்தவும் குறிப்பிட்ட சமூகத்தவராலேயே ஆக்கப்பட்ட சமூகத்தை கட்டுப்படுத்தி வழிப்படுத்துகின்ற ஓர் தொகுதி விதிகள் தானே தவிர வேறொன்றுமில்லை.

சட்டங்களின் வீச்செல்லையை வைத்து அது குடியியற் சட்டம் அல்லது குற்றவியற் சட்டம் என பொதுவாக வகுக்கப்படும். ஆனால் இந்த வகுப்பெல்லை ஆனது இவ்விரு சட்டங்களின் கீழும் நீண்டு செல்லும் ஓர் தொடரை ஒத்தது. ஏனெனில் சட்டம் ஓர் பௌதீக விஞ்ஞானம் அன்று அது ஓர் சமூக விஞ்ஞானம் சமூகத்தின் நடவடிக்கைகட்கேற்பவே அது விளைவுகளை கொடுக்கின்றது. சமூக மாற்றங்களுக்கேற்ப அது பரிமாணமாற்றத்திற்கு உட்படக்கூடியது.

இலங்கை போன்ற பல்வகைமை சட்ட ஆளுமை கொண்ட ஓர் நாட்டில் பணியாற்றுவது என்றுமே சட்டவல்லுணர்கட்கு சவாலான ஒன்று என்பது மறுக்க முடியாததாகும். ஏனெனில் நாம் பல்வகைமையான பலவேளைகளில் உள்ளக முரண்பாடுகளுடைய சட்டங்கள் மூலம் இன்று வரை ஆளப்படுகின்றோம். அவற்றை நாம் அந்நிய சட்டங்கள் (Foreign laws), சுதேச சட்டங்கள் (Indigenous laws) மற்றும் நியதிச்சட்டங்கள் (Statutory Enactments) என தேவைக்காக வகுத்து காட்ட முடியும்.

அந்நிய சட்டங்கள் என நோக்கும் போது நாம் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரின் காலணித்துவ நாடாக விளங்கியிருந்தோம். இவ் அந்நிய நாட்டவர் தமது நிர்வாக தேவைகட்காக தமது சட்டங்களை இலங்கையில் அமுல்படுத்தினர். இதன் படி போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட உரோம டச்சு சட்டமும் (Roman Ducth Law) ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலச்சட்டமும் (English law) இன்றைய இலங்கை தளத்தில் முக்கியத்துவம் பெறுபவை. உரோம டச்சு சட்டம் பெரும்பாலும் குடியியல் விடயங்களில் (Civil Matters) செல்வாக்கு செலுத்துகின்றது. உதாரணமாக திருமண விடயங்கள் (Matrimonial Issues), திருமணக்குலைவு (Dissolution lf Marriage), காணி விடயங்கள் மற்றும் கடல்சார் ஆளுகை (Admiralty Jurisdiction) விடயங்கள். ஆங்கிலச்சட்டம் நவீன சட்டங்கள் என வர்ணிக்கப்படுவதோடு பெரும்பாலும் குற்றவியற் சட்ட பரப்பு (Criminal Law), வியாபாரச் சட்டம் (Business Law) மற்றும் ஒப்பந்த சட்டங்கள் (Contract law) என்பவற்றில் பயன்படுகின்றது.

சுதேச சட்டங்கள் எனப்படுபவை எமது பரம்பரைக்கு உரிய எம்முடைய சட்டங்களாகும். இவை இலங்கை வாழ் மக்களால் ஆரம்ப காலம் தொட்டே மரபுகள் மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழமைகளாகும். இவை அந்நிய சட்டங்களுடன் ஒப்புநோக்குகைக்கு உட்படின் செல்வாக்கு குறைந்தவையாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தளப்பரப்பை உடையதாகவும் காணப்படுகின்றன. சுதேச சட்டங்களை மூன்று வகையான சமூகத்தவர்க்கு உடைய மூன்று வகை சட்டங்களாக காட்ட முடியும்.

0 1. தேசவழமைச் சட்டம்- Thesawalamai Law
0 2. கண்டியச் சட்டம்- Kandiyan law
0 3. முஸ்லீம் சட்டம்-Muslim Law

தேசவழமைச் சட்டம் வடமாகாண தமிழர்களின் தனிச்சட்டமாகும். அதாவது முன்னர் வடமாகாண தமிழர்கள் மலபார் என அழைக்கப்பட்டனர். தேசவழமை மலபார்கட்கு மட்டுமே உரித்தான சட்டமாகும். இச்சட்டம் ஆள்சார் சட்டமாகவும் (Personal law) இடம் சார் (Geographical Law) சட்டமாகவும் தொழிற்படுகின்றது. சுதேச சட்டங்களில் இவ்விரு வகையான ஆளுகைகளையும் உடைய சட்டம் தேசவழமை மட்டுமே !

நபர்சார் சட்டம் எனில் மலாபார் தமிழர்கள் இலங்கையில் எங்கு வசித்தாலும் (வடமாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும்) அவர்கள் தேசவழமையால் ஆளப்படுவார்கள். இடம்சார் சட்டம் என்பது வடமாகாண நிலங்கள் யாவும் இச்சட்டம் மூலம் ஆளப்படும். அந்நிலங்கள் யாருக்கும் சொந்தமாக காணப்படலாம் உதாரணமாக சிங்களவர், முஸ்லீம் நபர்கள் யாராவது காணியை வடமாகாணத்தில் கொண்டிருந்தாலும் அவர்கள் அக்காணி தொடர்பில் தேசவழமையினால் ஆளப்படுவார்கள், இது இடம் சார் ஆளுகை எனப்படும். பெரும்பாலும் காணி, திருமணம் மற்றும் வழியுரிமையில் ஆளுகையை கொண்டிருப்பதோடு சில வியாபார வழக்கங்களிலும் குறிப்பிட்ட ஆளுகையை கொண்டுள்ளது.

அடுத்து கண்டிய சட்டம், இச்சட்டம் கண்டிய மாகாணங்களில் வசிக்கும் கண்டிய சிங்களவர்கட்கு மட்டும் ஏற்புடையதானது. இது ஓர் இடம் சார் சட்டமாகும். அதாவது கண்டிய மாகாணத்திற்கு வெளியே இச்சட்டம் ஏற்புடையதாக மாட்டாது. பெரும்பாலும் காணி, திருமணம் மற்றும் வழியுரிமை விடயங்களில் ஆளுகையை உடையது.

முஸ்லீம் சட்டம், ஓர் நபர் சார் சட்டமாகும். அதாவது முகமதீன்கள் (முஸ்லீம்கள்) இலங்கையில் எங்கு வசிப்பினும் அவர்கட்கு இச்சட்டம் ஏற்புடையதாகும். இச்சட்டம் திருமணம் மற்றும் வழியுரிமை என்பவற்றில் குறிப்பிட்ட ஆதிக்கம் உடையது.

அடுத்து நியதிச்சட்டம், அச்சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிகழளவு தேவை கருதி ஆக்கப்படும் சட்டங்களாகும். இச்சட்டங்களே இன்று பெருமளவில் எம்மை பிணிக்கின்றன. 1972ஆம் ஆண்டு முதல் சுகந்திரமான அரசியல் யாப்பின் கீழ் இப்பணி இன்று வரை இலங்கை சட்டவாக்கத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அடுத்து நாம் நீதிமன்ற முற்றீர்ப்புக்களை (Judicial Preceding) பார்க்கலாம். இவை சட்டங்கள் இல்லை எனினும் நீதித்துறையின் ஒரு உறுதிப்பாட்டினை பேணும் நோக்கோடு நீதிமன்றங்களால் பின்பற்றி வரப்படுபவை. எனவே நீதிமன்ற பதவணியில் உயர் நிலையிலுள்ள நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது கீழ் நிலை நீதிமன்றங்களை பிணிக்கும். எனவே இவை நீதிமன்றங்களை கட்டுப்படுத்துவதால் மக்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் போலவே செயற்படுகின்றது.


மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் ஓர் அறிமுகத்திற்காகவே வரையப்பட்டது. இச்சட்டங்களின் அமுலாக்கத்தன்மை பற்றி அறிய அச்சட்டங்களின் சட்டமூலங்களையும் குறிக்கப்பட்ட வழக்கு தீர்ப்புகளையும் ஆராய்வது அவசியமாகும். தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் அவற்றை விரிவாக ஆராய்வோம்…… 
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது