Social Icons

Pages

Wednesday 31 July 2013

நட்போடு…………….


நட்பு என்ற சொல் ஏதோ பொருள்கோடல்களிற்கு அப்பாற்பட்டு உயிர்களிடையே உலாவி வரும் உணர்ச்சிகளில் தனித்துவமானதும் உன்னதமானதாகும்.

மனித உறவுகள் பெரும்பாலும் இரட்டிப்பு சொந்தம் என்றோ அல்லது திருமண முறை உறவுகள் என்றோ உறவு முறைமைகளை உறுதிப்படுத்தி கொள்கின்றோம். அதோடு பிணைப்பை பின்ணிணைக்கும் காரணிகளாக மதம்,சாதி,இனம் அதோடு மானிடம் தாமாக வரையறுத்த மட்டுப்படுத்தற்காரணிகளையும் சார்ந்தே பிணைந்துள்ளது.



விசித்திரமும், தனித்துவமும் என்னவெனில் நட்பு மனித உயிரிகளை தாண்டி ஐந்தறிவு ஜீவன்களிடமும் புரையோடி காணப்படுவதுதான். சோற்றிற்கு நன்றி காட்டும் நாய் முதல் வித்தைகளில் அடக்கி ஆளப்படும் சிங்கம் வரை மனிதனுக்கு இசைந்து போவது நட்பால் தானே !

நண்பனுக்காக உயிரை கொடுப்பது எளிது, ஆனால் நட்பிற்காக உயிரை கொடுக்கக்கூடிய நண்பன் கிடைப்பது அரிது. எனும் முதுமொழிக்கு புரூட்டஸ் காலம் முதல் இன்று வரை நட்பிற்கான துரோகங்கள் தொடர்கதையாக உள்ளது. நட்பு அல்லது நண்பர் வட்டம் ஓர் காரணத்தையோ, கொள்கையையோ வைத்தே உருவாகுகின்றது என்பது வெளிப்படை. அதற்காக எதிரிகளின் உருவாக்கம் அல்லது  செயற்பாடு என்பது மேலும் நட்பை வலிமைப்படுத்துகின்றது. ஏனெனில் வாழ்வின் அர்த்தமே வெற்றி என்ற ஒன்றிலேதான் தங்கியுள்ளது. எதிரிகள் போட்டியை உருவாக்குவார்கள், போட்டி நம்மை சிறந்தவராக்குகின்றது, அல்லாவிடில் நாம் உள்ளதை மட்டும் கொண்டு திருப்தியடைந்து விடுவோம்.

ஆனால் அந்தப்போட்டி ஆரோக்கியமானதாக, முதுகில் குத்தும் வழக்கத்தை பழக்கமாக்காததாக இருப்பது அவசியம். ஆனால் இன்று முகதுதி பாடி முதுகில் குத்துவோர் அனைவரும் சிறந்த தியாக உள்ளங்கள் போலவும் உண்மையை உரக்க சொல்பவர்கள், அனைவருக்கும் சமநிலையை நிகழளளவில் பெறவேண்டும் தீராத ஆவலுடையவர்கள், கட்டுப்பாடற்றவர்களாகவும் அன்பில்லா முரடர்களாகவும் நோக்கப்படுகின்றனர்.

ஆனாலும் அவர்கள் அறிவார்கள் யாரென்பதை தளங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்களின் கொள்கையும் வாழ்வும் இதுதான் அதாவது “எனக்கு அடிமைகள் யாருமில்லை நான் யாருக்கும் அடிமையுமில்லை”. ஆனால் முகதுதி பாடிகளோ முதகெலும்பற்ற தம்மை அடிமைகளாக அர்ப்பணித்து ஏதோ ஒன்றை பெறமுயலும் அப்பாவி அடிமைகள் அவர்கள் ஏனெனில் சொற்பகால சலுகைகளிற்காக தமது உரிமைகளை விட்டுக்கொடுப்போர் அந்த சலுகைகளை தக்கவைப்பதும் இல்லை, உரிமைகளை அனுபவிப்பதுமில்லை.

ஆனால் இளமையில் ஏற்படும் நட்பு ஒழுங்காக பராமரித்து சக்திகள் ஒன்று குவிக்கப்படின் மாபெரும் சிகரங்கள் இலகுவாக அடையப்பட ஓர் இலகுபொறிமுறையாக காணப்பட இளமையிவ் தகா சேர்க்கை ஒருவரின் ஒட்டு மொத்த வாழ்வையே முழுமையாக நாசமாக்கிவிடும் ஓர் இலக்கை நோக்கி குறிபார்த்தெய்யப்பட்ட அம்பு போல் செயற்பட வேண்டிய நாம் சொந்த விருப்பு வெறுப்புகட்கு அப்பாற்பட்டு நாம் ஏற்படுத்திக்கொண்ட பொது இலக்கிற்காய் உழைக்க வேண்டும். மொத்தத்தில தீயா வேலை செய்யணும் நட்புகளா !


Wednesday 17 July 2013

Whistle Blower - எச்சரிக்கை குரலெழுப்புவோன்


“சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு தருணமும் எதேச்சாதிகாரத்தையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் சகித்து கொள்ள முடியாத சொற்ப எண்ணிக்கையான தனிநபர்கட்கு ஏற்படுகின்ற அதிவிஷேடமான தைரியத்தின் விளைவாகவே தலைப்பு செய்திகளாகின்றன”.

Whistle Blower அதாவது எச்சரிக்கை ஒலி எழுப்புவோன் என வகைப்படுத்தப்படுவோர் ஓர் படியாக்கற் முறைமையை கொண்ட நிறுவனத்தின் செயற்பாடுகளில் காணப்படும் அல்லது அதிகார படிமுறை நிச்சயிக்கப்பட்டோரால் நிகழ்த்தப்படும் நடத்தைப்பிறழ்வு (misconduct), நேர்மையீனம் (dishonest), சட்டமீறல்கள் (illegality), இலஞ்ச ஊழல் (Bribe and corruption) நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு பகரங்கப்படுத்துபவன் ஆவான். இம்முரண் செயற்பாடுகள் மக்களுக்கு வர்த்தகத்தை வழங்கக்கூடிய அனைத்து விதமான நிர்வாக கட்டவியல் அமைப்புகட்கும் அரச நிறுவனங்கள் தனியார் மற்றும் பொது கம்பனிகள் எந்த ஒரு நாட்டினதும் வர்த்தகவெல்லை நிறுவனங்கள் (இங்கு வர்த்தகம் என்ற பதமானது பொருள் மற்றும் வேவை பரிமாற்றத்தை உணர்த்தி நிற்பதால் அனைத்து நிறுவன வகையறாக்களும் இக்கண்காணிப்பு வளையத்தினுள் அடங்கிவிடும். உதாரணம் கரிசனை மையங்கள் (Charity Organizations)



Whistle Blowers தங்களுடைய செயற்பாடுகளை அக்குறிப்பிட்ட நிறுவனத்தினுள்ளேயோ அல்லது பரந்தளவில் மக்கள் சமூகம் எனும் தளத்திலோ எச்சரிக்கையை வெளிப்படுத்துபவர்.

இதன் முக்கியத்துவம் என்னவெனில் “வெள்ளம் வரும் முன்பே அணை கட்டவேண்டும்” எனும் கோட்பாட்டினடிப்படையில் விளக்ககூடியது. அதாவது இச்செயற்பாடு ஓர் முன்னெச்சரிக்கை அலாரமாக தொழிற்படுவதுடன் ஓர் நிறுவனத்தின் செயற்பாட்டு முகவராண்மைகளின் பிழையான நடத்தையால் அந்நிறுவனம் எதிர் விளைவுகளை நிகழளவில் உருவாக்குவதை தடுப்பதுடன் வேலைத்தளத்தின் தொழில் சார் தரத்தை அதிகரிக்கவும் உற்பத்தியின் வினைத்திறனாற்றலை மேம்படுத்தவும் இச்செயற்பாடு பயனுடையதாகின்றது. ஆனால் Whistle Blowing சுகந்திரமாகவும் சீரானதொடராகவும் இடம் பெற ஓர் வினைத்திறனான கொள்கை கட்டமைப்பு (An effective whistle blowing policy) தேவைப்படுகின்றது. இது குறிப்பிட்ட நாட்டின் சட்டங்கள் மூலமாகவோ அல்லது நடைமுறை விடயங்கள் மூலமாகவோ செயன்முறைப்படுத்தலுக்கு உட்படக்கூடியது.

ஆனால் பெரும்பான்மையான தனிநபர்கள் இந்த whistle Blowers எனும் செயற்பாட்டு பதத்தை தமது வாழ்க்கையில் பிரயோகிப்பதில்லை. காரணம் வஞ்சம் தீர்க்கப்படுவோம் என்பதை விட தொழிலாண்மையின் தொடர்புகளின் வலைப்பின்னல் இழக்கப்படும் எனும் மேலோட்டமான அச்சமே காரணமாக உள்ளது.

ஒப்பீடாக Whistle Blowers ஆக தொழிற்படுபவர்கள் பலதடவைகள் வெளிப்படையாகவே குறிப்பிட்ட நிறுவன கட்டமைப்புக்கள் மூலமாகவோ அல்லது நாட்டின் சட்ட முகவராண்மைகள் மூலமோ பழி தீர்க்கப்படுகின்றனர் என்பது உண்மை.

இவர்கள் வேலைத்தளத்தினுள் வேலைநிறுத்தம், வேலை இடைநிறுத்தம், சம்பளக் குறைப்பு மற்றும் ஏனைய வேலையாட்களிடையே வேறுபாடாக தரக்குறைவாக நடாத்தப்படல் போன்ற அவதிகட்கு ஆளாகின்றனர். இன்று இவர்கட்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்வினை முறைமை Shoot the MESSENGER என அழைக்கப்படுகின்றது.  அதோடு குறிப்பிட்ட எச்சரிக்கை ஒலி எழுப்பியோனை குற்றவியல் நீதிமன்ற நியாதிக்க முறைமை மூலம் குற்றவாளியாக்கல் என்பது இன்று பரவலானது. மேலதிகமாக எதிர்கால வேலை தேடும் படலத்தில் புறக்கணிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. ஏனெனில் தமக்கு எதிராக செயற்படும் எந்த ஒரு ஊழியரையும் நிறுவன முகாமை கட்டமைப்புக்கள் பணியிலமர்த்த விரும்புவதில்லை.

வேறாக அவதுாறு வழக்கு மூலமும் இவர்களை சட்டப்படி குற்றவாளிகளாக இனம்காட்ட முடியும். இது குடியியல் வழக்காக நட்டஈடு கொடுப்பனவிலும், குற்றவியல் வழக்காக இனம் காணப்படின் அது சிறைவாசத்திலும் சென்று முடிவடையும். ஆனாலும் இன்று நீதித்துறையின் போக்கு அவதுாறு பரப்பினும் அது உண்மை என நிரூபிக்கும் பட்சத்தில் முழுப்பாதுகாப்பையும் குற்றம் சாட்டப்பட்டவர் பெறலாம் என்பது சற்றே ஆறுதலளிக்கக்கூடிய விடயம்.

இதில் ஓர் திண்ணமான விடயம் தனிநபர்கள் உலகின் அரசுகள் மேற்கொள்ளும் கபட தானங்களை துணிச்சலாக வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான். இதில் அதிகம் பேசப்படுவது அமெரிக்கா பற்றியும் அதோடு Whistle Blowers ஆன யூலியன் அசாஞ்சே மற்றும் எட்வேர்ட் சிநோடன் பற்றியே ஆகும்.

முதலாமவர் அசாஞ்சே, இவரின் விக்கிலீக்ஸ் பற்றி அறியாதவர்கள் இணைய உலகில் இல்லை என்றே கூறலாம். இவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஏனைய நாடுகளில் காணப்படும் அமெரிக்காவின் துாதுவராயலங்களுடன் மேற்கொண்ட தொடர்பாடல் விடயங்களை தனது இணையத்தினுாடாக அம்பலப்படுத்தியிருந்தார். அதில் அமெரிக்காவின் இரட்டை முகமும் ஏனைய நாடுகளில் மேற்கொண்ட குறிப்பிட்ட  ஆட்புல அரசுகட்கு எதிரான சதி வேலைகளும் வெளிச்சத்திற்கு வந்தன. எனவே இப்போது அசாஞ்சே இதற்காக பெற்ற பரிகாரம் அவர் மீது தொடரப்பட்டிருக்கும் பாலியல் சேட்டை வழக்காகும்.

இரண்டாமவர் சிநோடன், இவர் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு மையம் சிவிலியன்களின் தொடர்பாடல் வலையமைப்பை ஊடறுத்து மக்களால் பரிமாற்றப்படும் விடயங்களை ஒட்டுக்கேட்டதுடன் அவற்றை பதிவு செய்தும் வைத்திருந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இவர் மிக இளநிலை C.I.A (Central intelligence Agency) அதிகாரி என்பது குறிப்பிட கூடியது. தனது மனட்சாட்சி உறுத்தியதன் காரணமாகவே இத்தகவல்களை வெளியிட்டேன் என அவர் ஒப்புக்கொண்டார். இது ஓர் அடிப்படை மனித உரிமையான தனிமைக்கான உரிமையை (Right to Privacy)மீறுவதாக இச்செயல் அமைகின்றது என வாதிடுகின்றார். ஆனால் இவர் தொடர்ந்தும் அமெரிக்காவால் நீதிமுறை விசாரணைகட்காக தேடப்பட்டு வருகின்றார். இது அதிபர் பாரக் ஒபாமாவின் இரண்டாம் பதவிக்காலத்தில் ஓர் அழுத்தக்கறை என அரசியலவதானிகள் கணக்கிடுகின்றனர்.

இவர்களை நோக்கும் போது ஓர் குறிப்பிட்ட நாட்டின் பிரஜை எனும் வகையில் அவர்கள் செய்தது நிச்சயம் ஓர் தேசதுரோக செயலே ஆயினும் முழு மானிட சமுதாயம் என்று பார்க்கும் போது அது ஓர் மனிதாபிமாக செயலே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஓர் மனித உயிரி முதலில் தனது சமூகமான மானிடத்திற்கு தனது விசுவாசத்தை காட்டிய பின்னரே நாடு எனும் எல்லையினுள் தன்னை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பட்டயம் (Universal Declaration of Human Rights) அப்பட்டயம் எண்ணிட்டுள்ள உரிமைகள் மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவர்க்கும் உரியவை என வரையறுக்கின்றதே தவிர குறிப்பிட்ட நாட்டவர்க்கு உரியவை என வரையறுக்கவில்லை.

நாடு என்ற வகையில் குடிமகனுக்கு உள்ள உரிமைகளை அனுபவிக்க புடிமகனுள்குள்ள கடமைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் மேற்குறிப்பிட்ட உதாரண நபர்களை போன்றோர் குடிமகனுக்குரிய  கடமைகளில் இருந்து விலகி முழு மனித சமுதாயத்திற்காகவும் தம்மை அர்ப்பணிந்திருந்தனர். அரசுகள் என்றும் அமைதிகாக்கும் குடிகளையே விரும்பும் அது என்றும் ஆர்ப்பாட்டமாக தனது திரைமறைவுச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் குடிகளை விரும்பாது.

மேலாக Whistle Blowing இன்று கீழ்வரும்  விடயங்கட்கு தனது பரப்பெல்லையை விஸ்தரித்துள்ளது.

01. சட்ட மீறுமை-Criminal Offence
02. கடமைப்பாட்டில் இருந்து மீறல்-Failure to comply with legal obligation
03. நீதிறை பிழையாக வழிகாட்டல்- Miscarriage of Justice
04. சுகாதாரக்கேடான செயற்பாடுகள்- Endangering of health safety
05. சுற்றாடலை மாசாக்கும் நிகழ்வுகள்- Damage to the environment
06. நேர்மையற்ற பாகுபாடு- Unfair discrimination

இச்செயற்பாடுகளை மேற்கொண்டமைக்காக பழிவாங்கல் எனும்
தடையிலிருந்து தம்மை பாதுகாக்க Whistle Blowers கீழ்வரும் முறைகளை கைக்கொள்ளலாம்

01.சட்ட ரீதியான பாதுகாப்பை பெறல்
02.அரசின் பாதுகாப்பு முகவராண்மைகளை பயன்படுத்தல்
03. குழு வலையமைப்புக்களை அமைத்தல், பலப்படுத்தல்
04.சர்வதேச தளத்தை தற்பாதுகாப்பிற்காக பயன்படுத்தல்

சில நாடுகள் Whistle Blowers ஐ பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளைக்கூட கொண்டிருக்கின்றன.  உதாரணமாக
01. தென் ஆபிரிக்கா- Protected Disclosure Act
02. ஐக்கிய இராச்சியம்- Public Interest Disclosure Act
03. நோர்வே- Working Environment Act
04. இந்தியா – Protection of Whistle Blowers Act

ஆகியவற்றை பட்டியல் இடமுடிந்த போதும் இலங்கையில் இவ்வாறன ஏற்பாடுகள் ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்ட மனவேதனைகட்கு என்றும் உட்பட்டவை. ஆனால் சட்டம் உள்ள நாடுகளில் கூட பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே ! இதற்கு உதாரணமாக சட்டம் அமுலிலுள்ள பாரத தேசத்தில் IPL கிரிக்கெட் சூதை வெளிப்படுத்திய பொலிசு கான்ஸ்தோபிள் ஒருவர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டதை காட்ட விரும்புகின்றேன்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் சமூகத்தில் அபாய செயற்பாடுகட்கான எச்சரிக்கை அலாரத்தையும் அந்த அலாரத்தை உருவாக்குவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதற்கான பரிகாரங்களையும் பட்டியலிடுகின்றன. ஆனால் Whistle Blowers மோதும் கட்டமைப்பை பொறுத்து அவர்கட்காக பதில் விளைவுகள் மோசமாக இருப்பதுடன் கிடைக்கும் பரிகாரங்களும் மறுக்கப்படும் வாய்ப்பு நிகழளவில் அதிகம் என்பதையும் கவனத்திற்கொள்வது சிறப்பானது.






Friday 12 July 2013

மனிதராக இருப்பதற்கான விதிகள்


01.நீங்கள் ஓர் உடலை பெறுவீர்கள்
நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் இது உங்களுடையதுதான்

02.நீங்கள் பாடங்களைக் கற்பீர்கள்
மரபுசாரா பள்ளியான வாழ்க்கையில் நீங்கள் முழு நேரமாக சேர்க்கப்படுவீர்கள். இந்தப்பள்ளியில் நீங்கள் தினந்தோறும் பாடங்களைக் கற்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்களுக்கு அந்தப் பாடங்கள் பிடித்திருக்கலாம் அல்லது அவற்றைப் பொருத்தமற்றதாகவோ மடத்தனமாகவோ நினைக்கலாம்.

03.தவறுகள் இல்லை, பாடங்கள் மட்டுமே

முயற்சித்து பார்த்து தவறுகளை அறிவதுதான் வளர்ச்சி. பரிசோதனை முயற்சி பலன் தரும் சோதனைகளைப் போல தோல்வியுற்ற சோதனைகளும் முயற்சியின் ஓர் அங்கம் தான்

04.கற்றுக் கொள்ளப்படும் வரை பாடம் திருப்பித் திருப்பி நடத்தப்படுகின்றது.
ஒரு பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் வரை அது பல்வேறு வடிவங்களில் உங்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாடத்தை நீங்கள் கற்ற பிறகு அடுத்த பாடத்திற்கு போகலாம்.

05. பாடங்களை கற்பதற்கு முடிவில்லை.
வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் அதற்குரிய பாடங்களை் இல்லாமல் இருப்பதில்லை. நீங்கள் உயிரோடிருந்தால் கற்பதற்கான பாடங்கள் இருக்கும்.

06.இங்கேயை விட அங்கே சிறந்தது அல்ல.
உங்களின் அங்கே இங்கே ஆக மாறும் போது, நீங்கள் மற்றொரு அங்கேயை அடைவீர்கள். அது மீண்டும் இங்கேயை விட சிறந்ததாக தோன்றும்.

07.மற்றவர்கள் உங்களை காட்டும் கண்ணாடி தான்.
மற்றொரு நபரைப் பற்றிய சிலவற்றை நீங்கள் விரும்பவே, வெறுக்கவோ முடியாது. அது உங்களிடம் நீங்கள் விரும்புவதையோ , வெறுப்பதையோ பிரதிபலிக்காத வரை.

08.நீங்கள் வாழ்க்கையில் என்னவாகப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான்.
உங்களுக்குத் தேவையான உபகரணங்களும் வசதிகளும் உங்களிடம் இருக்கின்றன.  அதை வைத்து என்ன செய்வது என்பது உங்கள் விருப்பம். சாய்ஸ் உங்களுடையது.

09.உங்களுக்கான விடைகள் உங்களுக்கு உள்ளேயே உள்ளன.
வாழ்க்கையின் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைப் பார்ப்பதும் கவனிப்பதும் நம்புவதும் தான்.


10. நீங்கள் இவை எல்லாவற்றையும் மறந்து விடுவீர்கள்.

வட மாகாண சபை தேர்தலும் தமிழர் தீர்வுகளும்


இன்றைய சமகால இலங்கையிலும், சர்வதேச அரங்கின் இலங்கைத்தீவின் கண்காணிப்புகளிலும் முதன்மை பெறுவது வட மாகாண சபை தேர்தலாகும். இது சாதாரண ஓர் ஜனநாயக வழமைச் செயல்முறைமை எனில் இந்தளவு முக்கியதுவம் காரியமற்றது. இன்று இலங்கை அரசிற்கு உள்ள இரண்டு பிரச்சினைகளாக போர்க்குற்றங்கள் மற்றும் இனப்பிரச்சனை தீர்வு. இனப்பிரச்சனைக்கான தோற்றுக்காரணி அழிக்கப்பட்டாலே போர்க்குற்றங்கட்கான அழுத்தக்காரணிகளும் நீக்கப்படும் என்பது திண்ணம்.


30 வருட இலங்கையின் கசப்பான அனுபவத்தையும் உலகின் தேசிய நலன் எனும் கோட்பாட்டிற்கு லங்காபுரியை பொறுத்தளவில் சகிக்க முடியா உச்ச அச்சுறுத்தலை கொண்டிருந்தவர்களை நிர்மூலப்படுத்தியதாக அறிவித்த பின்பு அவ்அச்சுறுத்தலுக்காக தோற்றுவாயை ஒரேயடியாக சர்வதேசத்தின் முன்பு துடைத்தழிப்பதற்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு. முன்பு 13ம் திருத்தத்தில் ஒன்றுமில்லை என வாதிட்ட தமிழ் தேசியவாதிகள் இன்று அதை பற்றி விமர்சிக்கவும் பிச்சு புடுங்கவும் தொடங்கி விட்டார்கள். எல்லாம் அதிகார வேட்கையும் அரசியல் ஆசையும் தான். ஓர் சட்டமாணவன் என்ற வகையில் எந்த வித அதிகார பகிர்வு ஆணைகளையோ சுயாட்சி அதிகாரத்தையோ முகத்தளவில் கூட கொண்டிராத 13ம் திருத்தம் இன்று தமிழ் தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தி கொள்வோரால் கூட உச்சளவில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது என்பது என்னை பொறுத்தளவில் சகிக்க முடியாத அல்லது நகைப்பிற்குரிய ஓர் விடயதானம்.

ஆனால் அதைக்கூட இலங்கை தேசியவாதிகள் இறையாண்மையின் அச்சுறுத்தலாகவும் தமிழர்கட்கான தனிநாட்டின் முதற்படியாகவும் சித்தரிப்பதை என்னவென்று கூற முடியும். தற்போது அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு பிறப்பித்துள்ள கட்டளைகள். மாகாண முறைமை ஒழிக்கப்பட வேண்டும். இடைக்காலத்தில் அதாவது ஒழிப்பு முறைமையை முற்றுப்படுத்தும் வரைக்கும் 5 கட்டளைகளை உடனடியாக தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும்.

0 1. மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.
0  2. மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்களை ரத்து செய்யப்பட வேண்டும்.
0  3. மாகாண இணைவிற்கான அதிகாரத்தை களைய வேண்டும்.
0 4. பெரும்பான்மை மாகாண சம்மதத்தின் பெயரல் ஓர் சட்டத்தை மத்திய அரசு ஆக்கின் அது அனைத்து மாகாணங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
0 5. மத்திய அரசு பிறப்பிக்கும் அனைத்து ஆணைகளும் மாகாண சபைகளை நேரடியாக கட்டுப்படுத்த வேண்டும். .

என்னை பொறுத்தளவிலே மேற்கூறப்பட்ட விடயங்களில் 04 ஐ தவிர அனைத்துமே 13ம் திருத்தத்தின் முகத்தளவிலேயே கோரிக்கைகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது. ஏனெனில் இங்கு மத்திய அரசு ஓர் சட்டமூலத்தை ஆக்கின் அது சம்மதளித்த மாகாண சபைகட்கு மட்டும் ஏற்புடையதாகுமே தவிர மற்ற சபைகளை பிணிக்கமாட்டாது.
ஆனால் இதில் உள்ள சூட்சுமம் இந்த தேர்தல் தமிழ் மக்களின் 60 வருட கால போராட்டத்திற்கு ஓர் முடிவை இட்டு விட்டதாகவும் தமிழர்கள் யுத்த முடிவு (POST WAR) என்ற தளத்தில் இருந்து முரண்பாட்டு முடிவு (POST CONFLICT) என்ற தளத்திற்கு தம்மை இந்த வட மாகாண சபை தேர்தல் மூலம் நகர்த்தி விட்டதாகவும் ஆனால் இதை ஏற்காத இலங்கை தேசியவாதிகளை கூட விஞ்சி இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கட்கு ஓர் ஜனநாயக ரீதியில் தீர்வை பெற்று கொடுத்து விட்டதாகவும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இலங்கை அரசாங்கத்தால் காட்டி விட முடியும்.

அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதானது ஜனநாயன விழுமியங்னை தமிழர் மதிக்கவில்லை என்பதை நிகழளவில் விடுத்து வெற்றியின் தறுவாயில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அதிகார நாற்காலியை விட தயாரில்லை என்பதையும் அதை எதிர்க்கின்ற தமிழ்க் கட்சிகள் கூட அதே தறுவாயில் இருப்பின் இதை முடிவைத்தான் எடுப்பார்கள் என்பதையும் யாரும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு வரலாற்றிலிருந்து உதாரணங்களை பதிவிட ஆரம்பித்தால் 60 வருட கால வரலாற்றை மீள்பிரசுரம் செய்வதை விடுத்து எனக்கு மாற்றுபாயமும் இல்லை.

ஆனால் 13ம் திருத்தத்தினுாடான அதிகார பரவலாக்கம் வெறும் கானல் நீர்தான் அதை அதன் உட்பிரிவு அலசல்களுடன் கணித ரீதியாக அமைவுறுத்தியுள்ளேன். அதாவது அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சட்ட உறுப்புரைகளையும் அந்த அதிகாரங்கள் பறிக்கப்பட வழிசமைக்கும் சட்ட உறுப்புரைகளையும் நேர்ப்படுத்தி விளைவு பூச்சியம் என அதாவது அதிகார பகிர்வு என்பதே இல்லை என காட்ட முயற்சிக்கின்றேன்.

இது சட்டவாக்கதுறையில் (Legislature) மாகாண சபைகளின் நிலைமையை காட்டுகின்றது.



இது மாகாண சபைகளின் நிறைவேற்றுத்துறை (Executive) நிலைமையை காட்டுகின்றது.


 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது